பழைய வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் - வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
high court order old case hearing every thursday
உச்ச நீதிமன்றம் முதல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் வரை ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இதில் குறிப்பிட்ட சதவீத வழக்குகளை விசாரித்து முடிவுக்கு கொண்டு வரும்போது, அதைவிட பெருமளவு புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்த நிலையில், மாற்றுமுறையில் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர உச்ச நீதிமன்றமும், அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களும் நடவடிக்கை எடுத்தன. இதற்காக தேசிய அளவில் ஆண்டுக்கு நான்கு முறை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இருப்பினும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான பலதரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்து விரைந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, ஜூடிசியல் பதிவாளர் கே.சீதாராமன் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். அதில், ''20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் அனைத்து வகையான வழக்குகளும், அந்ததந்த நீதிபதிகள் முன்பு வாரந்தோறும் வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
இந்த நடைமுறை சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று வழக்கறிஞர்கள், வழக்குகளை நேரடியாக தொடரும் பொதுமக்கள் ஆகியோருக்கு தெரியப்படுத்துகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
high court order old case hearing every thursday