பான் அட்டை இணைக்காமல் பத்திரப்பதிவு - சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி காட்டும் வருமானவரித்துறை.!
income tax ride sengundram and uraiyur sub register office
பான் அட்டை இணைக்காமல் பத்திரப்பதிவு - சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி காட்டும் வருமானவரித்துறை.!
தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பான்அட்டை இணைக்காமலே பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும், இதனால் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் வருமான வரித் துறைக்கு புகார் கிடைத்தது.
அந்த புகாரின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய சார் பதிவாளர் அலுவலகங்களை கண்டறிந்து, சோதனை நடத்த திட்டமிட்டனர். அதில் முதல்கட்டமாக சென்னை அடுத்த செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் திருச்சி மாவட்டம் உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 4-ம் தேதி சோதனை நடத்தபட்டது.

இதில் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட நிலங்கள் தொடர்பான விவரங்களின் கோப்புகள், பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுமார் 17 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள்ளனர்.
இதேபோன்று, திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சோதனை குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: "செங்குன்றம் மற்றும் உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் இருந்து ரூ.5 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பத்திரப் பதிவுகள் குறித்த விவரங்களை திரட்டி உள்ளோம்.
இதுவரைக்கும் ஆய்வு செய்த பத்திரப் பதிவு ஆவணங்களில் செங்குன்றத்தில் ரூ.2,000 கோடி, உறையூரில் ரூ.1,000 கோடி மதிப்பில் பான் அட்டை இணைக்கப்படாமல் பத்திரப் பதிவுகள் நடைபெற்று இருபதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இந்த ஆவணங்களை ஆய்வு செய்து வருவதால், இந்த தொகை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
income tax ride sengundram and uraiyur sub register office