ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு!
Jayalalithaa s jewellery handed over to Tamil Nadu govt
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள் எடை அளவு மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக முதல்-அமைச்சராக 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா பதவி வகித்த காலத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து 1996ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச்சுகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 66 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி கர்நாடக சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் சிபிஐ சிறப்பு கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ தீபா, தீபக் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டும் தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் தொடங்கியது.
இதில் 150 நகைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. எண்ணிக்கைப்படி நகைகள் சரிபார்க்கப்பட்டன. 290 நகைகளின் எடையளவு மதிப்பீட்டு பணி நிறைவு பெற்றது.மதிப்பீடு செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் தமிழக அதிகாரிகளிடம் நீதிபதி மோகன் முன்னிலையில் கர்நாடக கருவூல அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இன்று(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு எடை போடப்பட்ட நகைகளையும், மதிப்பீடு செய்ய வேண்டிய நகைகளையும் பலத்த பாதுகாப்புடன் விதானசவுதாவில் இருந்து மீண்டும் கோர்ட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன மீதமுள்ள நகைகள் நீதிபதி முன்னிலையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. அந்த பணிகள் முடிவடைந்து 481 வகையான நகைகளும் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் நிலத்திற்கான நில ஆவணங்களை இன்று தமிழக அரசிடம் நீதிபதி மோகன் ஒப்படைக்கிறார்.
English Summary
Jayalalithaa s jewellery handed over to Tamil Nadu govt