#தேனி: கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம்..!!
Police constable suspended for involved in ganja smuggling
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குமுளி காவல் நிலையத்தில் தலைமை காவலராக நல்லதம்பி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாதங்களாக கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கூடலூர் வடக்கு, கூடலூர் தெற்கு, குமுளி காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் போதை பொருட்கள் தொடர்பான வழக்கு சம்பந்தமாக மதுரை சிறப்பு அமர்வு நீதிமன்றம் மற்றும் குடிமை பொருள் அமர்வு நீதிமன்றம் தொடர்புடைய அலுவல் பணிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் பல்வேறு போதை பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய கஞ்சா பொட்டலங்களை எடுத்து நல்லதம்பி விற்பனை செய்துள்ளார்.
மேலும் கஞ்சா வியாபாரிகளுடன் நல்லதம்பி தொடர்பில் இருந்ததாகவும் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும் ஐஜி தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய தனிப்படையினர் தலைமை காவலர் நல்லதம்பி, சின்னமனூரைச் சேர்ந்த கணேசன் சின்னஓவுலாபுரத்தை சேர்ந்த நல்லதம்பி ஆகியோருக்கு கஞ்சா விற்றதை உறுதி செய்துள்ளனர்.
இதே போன்று தலைமை காவலர் நல்லதம்பி தொடர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் திண்டுக்கல் சரக ஐஜி உத்தரவின் படி கம்பம் வடக்கு காவல்துறையினர் காவலர் நல்ல தம்பி மீது வழக்கு பதிவு செய்ததோடு பணியிடை நீக்கம் செய்துள்ளனர். தலைமை காவலர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Police constable suspended for involved in ganja smuggling