திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினரின் ஆர்ப்பாட்டத்திற்கு தடைகள் –இந்து அமைப்பினர் திண்டுக்கல்லில் அதிரடி கைது!
Prohibitions on the demonstration of Hindu organizations in Tiruparangundram Hindu organizations were arrested in Dindigul
திருப்பரங்குன்றம் கந்தன் மலையை காப்பாற்ற கோரி இன்று இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவுசெய்திருந்தனர். இந்த போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் உட்பட 100 பேர் வரை கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை திண்டுக்கல் குமரன் திருநகரில் மாநில தொண்டரணி தலைவர் மோகன் என்பவரை நகர் வடக்கு போலீசார் கைது செய்து போலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அதேபோல், வேடசந்தூரில் அகில இந்திய இந்து மகா சபா தேசிய துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி, நிர்வாகிகள் சரவண பாண்டி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு பதிலாக வ.உ.சி. மக்கள் இயக்கம் மற்றும் ஒக்கலிகர் இளைஞர் பேரவை சார்பாக திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என வேடசந்தூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இந்த போஸ்டரை ஒட்டியதற்காக ஆத்துமேடு ராஜகோபாலபுரத்தை சேர்ந்த கார்த்திக் (30) மற்றும் அருண்குமார் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட தலைவர் மாரிமுத்து, வ.உ.சி. மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் முருகேசன், ஒக்கலிகர் இளைஞர் பேரவை தலைவர் முருகேசன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டது, மேலும் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
English Summary
Prohibitions on the demonstration of Hindu organizations in Tiruparangundram Hindu organizations were arrested in Dindigul