பட்டியலின இளைஞரை ஆபாசமாக பேசிய திமுக ஒன்றிய செயலாளர் - சிறையில் அடைப்பு.!
salem union secretary arrested for Talked obscenely to listed youth
சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரியில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோயிலில் கடந்த 26-ந் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர் பிரவீன்குமார் என்பவர் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்த மற்றொரு வகுப்பைச் சேர்ந்த மக்கள் இந்த தகவலை திமுகவின் சேலம் ஒன்றிய செயலாளரும், திருமலைகிரியின் தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவருமான மாணிக்கத்திடம் தெரிவித்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/salem sheduled youth mariyamman temple-q8vgk.png)
இதையடுத்து, மாணிக்கம் மறுநாள் கோவில் முன்பு பஞ்சாயத்து கூட்டி அந்த வாலிபரை அழைத்து வருமாறு தெரிவித்துள்ளார். அதன்படி, அங்குள்ளவர்கள் அந்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோர்களை கோவிலுக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு ஊராட்சிமன்றத் தலைவர் மாணிக்கம், இளைஞரை சாதி பெயரை சொல்லி ஆபாசமாக பேசி, இனி கோவிலுக்குள் வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்து கொலை மிரட்டல் விடுத்து அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாக பரவியதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கத்தை, ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து, அந்த வாலிபர், மாணிக்கம் உள்பட பத்து பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, மாணிக்கம் மீது வன்கொடுமை, தகாத வார்த்தையால் பேசியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது என்ற மொத்தம் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
![](https://img.seithipunal.com/media/CRIME 004.jpg)
இதையறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள், மாணிக்கத்தை கைது செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்தனர். இதனால் காவல் நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், மாணிக்கத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கு அவரை சிறையில் அடைப்பதற்கு நீதிபதி உத்திரவிட்டார். அந்த உத்தரவின் படி, இன்று காலை, மாணிக்கத்திற்கு சேலம் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்து, அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
English Summary
salem union secretary arrested for Talked obscenely to listed youth