தென் மாவட்ட அரசு பஸ்கள் இனி தாம்பரம் வாராது..போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
Southern district government buses will no longer come to Tambaram. Transport Corporation Announcement!
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.இதேபோல கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தபோதும், தாம்பரம் வரை பஸ்கள் இயக்கப்படுவதால் நெரிசலை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் போக்குவரத்து காவல்துறை வழங்கியுள்ள பரிந்துரைப்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் அனைத்தும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதையொட்டி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்துக்கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பஸ்கள், 3795 நடைகள் இயக்கப்பட்டு வருகின்றன என்றும் இத்துடன் கூடுதலாக 104 பஸ்கள் 815 நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Southern district government buses will no longer come to Tambaram. Transport Corporation Announcement!