கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி - கும்பகோணத்தில் பரபரப்பு.!
student delivery in college toilet in kumbakonam
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் வழக்கம் போல் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனே அவர் யாரிடமும் கூறாமல் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அவர் அந்தக் குழந்தையை ஒரு துணியில் சுற்றி கல்லூரியில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு எதுவும் நடக்காதது போல் வகுப்பறைக்கு சென்று மீண்டும் பாடத்தை கவனித்துள்ளார்.
பின்னர், அவரது ஆடைகளில் ரத்தக்கரை இருந்ததை பார்த்த சக மாணவிகள், அவரிடம் சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனக்கு மாதவிடாய் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்திலேயே ரத்தப்போக்கு அதிகமானதால் சக மாணவிகள் அதிர்ச்சியடைந்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். உடனே மாணவி 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சில மணி நேரத்திற்கு முன்பு தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பேராசிரியர்கள் சம்பவம் குறித்து, பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே மருத்துவமனைக்கு வந்த அவர்கள் மாணவியிடம் விசாரிக்கையில், தனக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், அதனை குப்பைத் தொட்டியில் போட்டதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் குப்பைத் தொட்டியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கும் குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆடுதுறை மகளிர் காவல் நிலைய போலீசார், மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
student delivery in college toilet in kumbakonam