கிடுகிடுவென உயரும் மீன்களின் விலை.. மீன் பிரியர்கள் அதிர்ச்சி!
The price of fish is soaring Fish lovers are shocked
மீன்பிடி தடைக்காலம் தொடங்கி இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.இதனால் மீன் பிரியர்கள் கவலையில் உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் மீன் வளத்துறை சார்பில் 61 நாட்கள் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் இந்த தடை காலம் அறிவிக்கப்படுவது வழக்கம், அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ம் தேதி தொடங்கியதை அடுத்து மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லவில்லை.இந்த தடை காலமானது வருகிற ஜுன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு அமலில் இருக்கும் என மீன் வளத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இந்த மீன் பிடி தடை காலத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த, 15 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், சென்னை காசிமேட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்ததால் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. எனினும், மீன்பிடி தடைக்காலம் தொடங்கி இருப்பதால், மீன்களின் வரத்து குறைந்துள்ளதனால் மீன்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்,
அதுமட்டுமல்லாமல் 1 கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. என்றும் சங்கரா ரூ.350ல் இருந்து ரூ.400-ஆகவும், இறால் ரூ.300-ல் இருந்து ரூ.400-ஆகவும், சீலா ரூ.700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர், இதேபோல வரும் நாட்களில் மீன்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இந்த மீன் பிடி தடை காலம் உள்ளதால் சென்னை ,கன்னியாகுமரி ,நாகப்பட்டினம் ,ராமேஸ்வரம்,தூத்துக்குடி,போன்ற கடலோர மாவட்டங்களிலும் மீன்களின் விலை 2 மாதத்துக்கு அதிகமாகத்தான் இருக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
English Summary
The price of fish is soaring Fish lovers are shocked