புதுச்சேரியில் தமிழர்களுக்கு எதிரான ஆட்சி நடக்கிறது..எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பரபரப்பு குற்றச்சாட்டு !
There is an anti-Tamil government in Puducherry Leader of the Opposition R. Siva's accusation
தமிழர்களுக்கு எதிரான ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் 1981–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர் 1986–ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மூலம் இயங்கி, பல்வேறு முனைவர்களை உருவாக்கிய புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை வேறு துறைக்கு மாற்றும் புதுச்சேரி அரசின் செயலை கண்டித்து புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன பாதுகாப்புக் குழு சார்பில் சட்டப்பேரவை அருகில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்மாமணி முனைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். முனைவர்கள் சுந்தரமுருகன், சடகோபன், திமுக இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, கலைமாமணி பாலசுப்ரமணியம், தமிழ்ச்சங்க துணைத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை வேறு துறைக்கு மாற்றும் புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேசியதாவது: – புதுச்சேரி மாநிலத்தில் தமிழ் மொழியின் அடையாளமாக, இந்த மக்களின் உணர்வாக, கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இருக்கக் கூடிய மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை இந்த பாஜக–என்.ஆர்.காங்கிரஸ் அரசு மூட நினைத்திருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். புதுச்சேரி மக்கள் வெகுண்டு எழுந்தார்கள் என்றால் அதற்கு புதுச்சேரி அரசு பதில் சொல்ல வேண்டி இருக்கும். புதுச்சேரியை ஆளுகின்ற என்.ஆர்.காங்கிரஸ் அரசு தனது உண்மை முகத்தை காட்ட வேண்டும். முதல்வர் ரங்கசாமி தமிழரா?. இது தமிழர்களுக்கான ஆட்சியா?. மொழிக்கான ஆட்சியா? என்பதை தெரிவிக்க வேண்டும். முதல்வர் ரங்கசாமியின் முகம் மொழியை அழிக்கிற முகமா?. அல்லது பாஜக முகமா?. உண்மையில் புதுச்சேரி மக்கள் மீது இனத்தின் மீது நேசம் வைத்திருக்கின்ற முகமா என்று தெரிவிக்க வேண்டும்.
பல்வேறு ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கிய இந்நிறுவனத்தை சிதைத்துள்ளது வெட்ககேடானது. கலை பண்பாட்டுத் துறை மூலம் இந்நிறுவனம் இயங்கினாலும் கூட இன்று பெயரளவிற்கு இயங்குகிறது. இந்நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் போதிய நிதி ஒதுக்கி அந்நிறுவனத்தை செம்மையாக நடத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் கோரிக்கை வைத்தோம். அதற்கு பதிலளித்த ஆட்சியாளர்கள் அந்நிறுவனத்தை மூடமாட்டோம் என்று உறுதியளித்தார்கள்.
ஆனால் ஒன்றிய அரசு நம்முடைய தாய்மொழியான தமிழ் மொழிக்கு அவமரியாதையை ஏற்படுத்தி வருகிறது. செம்மொழி அந்தஸ்துள்ள தமிழ்மொழியை சிதைக்க நினைக்கிறது. இந்தியை திணிக்கனும், சமஸ்கிருதத்தை வளர்த்தெடுக்கனும் என்பதற்காக ஒன்றிய அரசு அதிகளிவில் நிதி ஒதுக்கி புதுச்சேரியை நாசமாக்க துடிக்கிறது. சிபிஎஸ்இ பாட்டத்திட்டத்தை புகுத்தி புதுச்சேரி மாணவர்களை பாழடித்துள்ளனர். 11–ஆம் வகுப்பில் 4 பாடப்பிரிவில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. தமிழர்களுக்கு எதிரான ஆட்சி ஒன்றியத்தில் நடக்கிறது என்றால் அதைவிட மோசமான ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது. இவ்வாறு பேசினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் பக்தவச்சலபாரதி, தாகூர் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜன், பாவேந்தர் அறக்கட்டளைத் தலைவர் கலைமாமணி பாரதி, தமிழ்மாமணி சிலம்பு செல்வராசு, புதுவை தமிழ்நெஞ்சன், மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ஜெகநாதன், சான்றோர் பேரவை தலைவர் நெய்தல் நாடன், உலகத்தமிழர் பேரவை செயலாளர் தமிழ்மணி, தமிழ் பாதுகாப்புக்குழு செயலாளர் இளமுருகன், சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பூபதி பெரியசாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், அமுதா குமார், தொகுதி செயலாளர் சக்திவேல், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாஸ், மகளிர் அணி காயத்ரி, வர்த்தகர் அணி குரு, தகவல் தொழிழில் நுட்ப அணி அருண், கிளைக் கழக செயலாளர்கள் அகிலன், கிரி, விஜயகுமார், நெல்சன், ராம்குமார் உள்ளிட்ட 30 தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
English Summary
There is an anti-Tamil government in Puducherry Leader of the Opposition R. Siva's accusation