விசாரணைக்கு அழைத்த பெண்ணை மானபங்கம் செய்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்; 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!
Three including inspector sentenced to 10 years in prison for Abuse on woman who called for questioning
விசாரணைக்கு அழைத்து வந்த பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில், ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர், 02 போலீசாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் செம்பட்டி சேடப்பட்டியில் வீடு ஒன்றில் கடந்த 2001-ஆம் ஆண்டு நகை திருடு போனமை தொடர்பாக செம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இன்ஸ்பெக்டராக இருந்த ரெங்கசாமி, போலீசார் வீரத்தேவர், சின்ன தேவர் ஆகியோர், திருடு நடந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணை 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
குறித்த போலீசார் 03 பேரும் சேர்ந்து, அந்த பெண்ணை மானபங்கம் செய்துள்ளதாக கூறபட்டது. அத்துடன், விசாரணைக்கு அழைத்தால் மீண்டும் வர வேண்டும் எனக்கூறி அன்று மாலையே அந்த பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மனமுடைந்த அந்தப் பெண், தன் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த பெண், தன் கணவருடன் இணைந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ.,விடம் புகார் அளித்திருந்தார். குறித்த சம்பவம் தொடர்பில், அவர் 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முதலில் விசாரணை நடந்தது. பிறகு முதன்மை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா அளித்த தீர்ப்பில்,'' ரெங்கசாமி, வீரத்தேவர், சின்ன தேவர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறையும், ரூ.36 ஆயிரம் அபராதமும் விதித்து'' உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Three including inspector sentenced to 10 years in prison for Abuse on woman who called for questioning