இலங்கையின் புதுக்கடை நீதிமன்றத்தில் படுகொலை; உளவுப்பிரிவு வீரர் கைது; அதிரவைக்கும் பின்னணி..!
Murder in Sri Lankas Pudukada Court
இலங்கையின் நீதிமன்றத்துக்குள் புகுந்து போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான சஞ்சீவ குமார சமரரத்னேவை என்ற நபரை, அந்நாட்டு ராணுவ உளவுப்பிரிவை சேர்ந்த முகமது அஸ்மன் ஷெர்புதீன் என்பவர் சுட்டு கொன்ற சம்பவம் அங்கு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவியல் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன, இன்று (19) காலை 10.00 மணியளவில் இலங்கையின் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் 05 ஆம் இலக்க நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்ற வளாகத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் கூண்டில் இருந்து இறங்கவிருந்தபோது அந்த இடத்திற்கு வருகைத்தந்த வழக்கறிஞர் போல வந்த சந்தேகநபரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த சஞ்சீவா ஒரு பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தேசிய மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ருக்ஷன் பெல்லான தெரிவித்த்துள்ளார்.
நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு ரிவால்வரை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு கொலையாளியை போலீசார் புத்தளம் அருகே பாலவி பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவில் வேலை பார்த்த முகமது அஸ்மன் ஷெர்புதீன் (34) அந்த கொலையாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், முகமது அஸ்மன் ஷெர்புதீன் ஏழு கொலை வழக்குகளில் தேடப்படும் நபர் எனவும், என்ன காரணத்துக்காக நிழல் உலக தாதாவை அவர் சுட்டுக் கொன்றார் என தீவிர விசாரணை நடந்து வருகிறதாக கூறப்படுகிறது.
அத்துடன், மேலும், சட்டத்தரணிகள் நீதித்துறை கடமைகளுக்குப் பயன்படுத்தும் குற்றவியல் நடைமுறைச் சட்ட புத்தகத்தில் பக்கங்களை வெட்டி துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததாகவும், நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு ஆதரவளித்த பெண் ஒருவரால் குறித்த புத்தகம் அவருக்கு வழங்கப்பட்டதாகவும், இது தொடர்பில் விசாரணை நடந்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
English Summary
Murder in Sri Lankas Pudukada Court