இது திமுகவின் சதி - ஆர்.எஸ்.பாரதி விவகாரத்தில் பூகம்பத்தை கிளப்பிய டிவிட்!
DMK RS Bharati speech and Annamalai Condemn
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ”நான் படித்தபோது பி.ஏ. படித்தாலே போர்டு வைத்துக் கொள்வார்கள். தற்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது. பட்டப்படிப்புகள் என்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விதித்துள்ள செய்திக்குறிப்பில், "எப்போதெல்லாம், திமுக ஆட்சிக்கு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு வருகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலய வாசலிலேயே இருக்கும் ஆர்.எஸ்.பாரதியை ஏவி விடுவார்கள் போல. கள்ளக்குறிச்சியில் திமுக ஆதரவோடு நடந்த கள்ளச் சாராய விற்பனையில் 65 உயிர்கள் பலியானதை மடைமாற்ற ஆர்.எஸ்.பாரதியைக் களமிறக்கியிருக்கிறார்கள்.
முன்பு ஒருமுறை, தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு நீதிமன்றப் பதவிகள் கிடைத்தது திமுக போட்ட பிச்சை என்று பேசினார். இன்று, தமிழகத்தில் மருத்துவர்கள் உருவானது திமுக போட்ட பிச்சை என்று பேசியுள்ளார். அதோடு, தமிழகத்தில் இன்று நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது என்று ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.
தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே அமைத்துள்ளது என்பதை மறந்த ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் மருத்துவர்களை உருவாக்கியதே திமுகதான் என்று போலிப் பெருமை பேசிக் கொள்கிறார்.
திமுக முதல் குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகளுக்கு வாதாட வேண்டுமானால், டெல்லி, மும்பையிலிருந்து பல மூத்த வழக்கறிஞர்களையும், தமிழக அரசு சார்பான வழக்குகளுக்கு, தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்களையும் தேர்ந்தெடுக்கும் கோபாலபுர குடும்பம், ஆர்.எஸ்.பாரதியை வாதாட அனுப்புவது, கதைக்கு உதவாத வழக்குகளுக்காகத்தான்.
தங்கள் பெற்றோரின் கடின உழைப்பாலும், தங்கள் கடும் முயற்சியாலும் படித்து முன்னேறும் மாணவச் செல்வங்களை அவமானப்படுத்தி, அவர்கள் வளர்ச்சிக்கு திமுகதான் காரணம் என்று கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களைத்தான் திமுக உண்மையில் உருவாக்கியிருக்கிறது.
தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் ஆணவப் போக்கும், ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக மக்கள் அனைவரும் திமுகவினரை போன்றவர்கள் அல்ல. தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
DMK RS Bharati speech and Annamalai Condemn