கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: சிபிஐ விசாரணை தேவையில்லை - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை!
kallakurichi cbi case no need tngovt chennai hc
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதில் கோட்டைமேடு, கருணாபுரம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த சுமார் 229 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவரிகளில், நரம்பு மண்டலம் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு போன்ற உபாதைகளால் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 135 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். 4.5% மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தினாலே அது உயிருக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கள்ளச்சாராயம் தான் பலரது உயிர்களை காவு வாங்கியதுடன், அவர்கள் குடும்பங்களை தவிக்க விட்டுள்ளது என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.
இந்த கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யக்கோரி அதிமுக, பாமக மற்றும் பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா அறிக்கை தாக்கல் செய்தார், அதில், தான் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
மேலும், மரக்காணம் - செங்கல்பட்டு கள்ளச்சாராயத்தில் 99 சதவீதம் மெத்தனால் கலக்கப்பட்டு இருந்ததாகவும், மரக்காணம் சம்பவத்தின் தொடர்ச்சியான சம்பவம் கள்ளக்குறிச்சி சம்பவம் இல்லை என்றும், இதில் விசாரணை விரிவாகவும், துரிதமாகவும் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதால், சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 11-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
kallakurichi cbi case no need tngovt chennai hc