பழமையான மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. புகார்..!!
PMK complaint against who cut old trees
சென்னை: கூடுவாஞ்சேரியில் அரசு பயணிகள் விடுதி வளாகத்தில் இருந்த நூறு ஆண்டுகால பழமையான மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பாமக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பாமக நகரச் செயலாளர் அண்ணாமலை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் மனு அளித்துள்ளர்.
அந்த புகார் மனுவில் கூறியதாவது "கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு பயணியர் விடுதி வளாகத்தில் இருந்த பாழடைந்த பழைய விடுதியை இடித்துவிட்டு நகராட்சி அலுவலகம் மற்றும் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
அரசு கட்டிடங்கள் கட்டுவதற்காக போதுமான இடம் வசதிகள் இருந்தும் அரசு பயணியர் விடுதி வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வந்த பழமையான வேப்ப மரங்களை தேவையின்றி வெட்டியுள்ளனர்.
இந்த மரங்கள் இருந்திருந்தால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மரத்தின் நிழலில் இளைப்பாற ஏதுவாக இருந்திருக்கும்.
இந்த நிலையில் அரசு அனுமதியின்றி பயணியர் விடுதி வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டியதால் கோடைகாலத்தில் பொதுமக்கள் ஒதுங்க கூட இடமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அலுவலகத்தில் இருந்த பழமையான வேப்ப மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாமக நகர செயலாளர் அண்ணாமலை அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
PMK complaint against who cut old trees